உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு உரையாற்றுகிறார். முதலீட்டாளர்களை வரவேற்கும் பொருட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்குகளில் இன்று பிற்பகலிலும், நாளையும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. மாநாட்டை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மாலை நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.