திருவள்ளுவரால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறள் இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர். இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக்கிறது. இந்நிலையில் சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியிருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி. தமிழகத்தின் கடைகோடி பகுதியிலிருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார். இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, “திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார்.
திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்த கவிஞர்!
Popular Categories


