இந்திய காதலர் தினம் கொண்டாடினா என்ன…?!

Published:

book-lovers-day இது இலக்கியக் காதல்… இந்தியக் காதல்…. காதல் இல்லாம.. நம்ம பரம்பரை இல்லை! காதல் இல்லாம நம்ம பக்தி இலக்கியங்கள்கூட இல்லைன்னா… அப்படிப்பட்ட காதலுக்கும் காதலர் தினத்துக்கும் எவ்ளோ முக்கியத்துவம் நாம குடுக்கணும்? காதலர் தினம்னு யாரோ ஒரு பாதிரியார் பேரைச் சொல்லி இங்க மார்க்கெடிங் பண்ணிக்கிட்டிருக்காங்களே…! நம்ம நாட்டு புராதன காதலர் தினம்னு ஒண்ணு தொடங்கலாம்னு பார்க்கறேன்.. புது வகை மார்க்கெட்டிங்தான்! கம்பராமாயணத்துல… (ஐய…. இன்னா சார்… நீங்க?! எப்ப பாத்தாலும் ராமாயணம் மகாபாரதம்னுக்கிட்டு….ன்றீங்களா?) ராமாயணத்துல சீதையை கண்ணுல காமிச்சி… ராமனோட மனசுல சூட்சுமமா இருக்கற காதலை ஜெயிக்க வைக்கிறதுக்காக விஸ்வாமித்திரரு.. நடையா நடந்து… ராமனை மட்டும் தனியா கூட்டிக்கிட்டு…. ஜனகபுரியான மிதிலைக்குப் போயி… அப்படியே அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினள்னு கம்பனைப் பாட வெச்ச அந்த ஸீனை நிறைவேத்தினதுக்காக… அந்த தினத்தை காதலர் தினம்னு நாம கொண்டாடிக்கலாம்… அப்புறம் மகாபாரதத்துல… ருக்மிணிங்கற சின்னஞ்சிறுமி… கண்ணன்ங்கிற இளைஞனைப் பத்திக் கேள்விப்பட்டு… கேள்விப்பட்டு.. மனசில் ஆசையை வளர்த்துக்கிட்டு.. நெஞ்சிலே காதல் கொண்டு… அதுக்காக காதல் கடிதமெல்லாம் எழுதி… ஒரு ஏழை அந்தணனின் உதவியை நாடி… அவர் மூலமா கடிதம் கொடுத்து…. தன்னை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்துக்க ஒரு வழியைக் காண்பித்து… காதலில் ஜெயித்த அந்த தினத்தை நாம் காதலர் தினமா கொண்டாடலாம்… அப்படியும் இல்லையா…. இருக்கவே இருக்காரு.. நம்ம வேங்கடாசலபதி! அம்மையார் பத்மாவதி – அலமேலுமங்கையைக் கரம்பிடிக்க எத்தனை தூது, எத்தனை சமரசம்… எத்தனை நிபந்தனை எல்லாம் தாண்டி கரம் பிடித்த அந்த தினத்தை காதலர் தினமா கொண்டாடலாம். அப்படியும் இல்லையா…? இதெல்லாம் தெய்வங்கள் மனித உருவெடுத்து வந்து காதலில் வெற்றி கண்டதா நாம கொண்டாடிக்கிட்டிருக்கிற விசயங்கள்… ஆனா…. நம்ம திருமங்கை மன்னர்னு ஒருத்தர் இருக்காரே… அவரு… குமுதவல்லின்னு ஒரு மங்கையைக் காதலித்து அவளைக் கரம்பிடிக்க என்ன பாடெல்லாம் பட்டாரு? கடைசியில எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு… அப்படி ஒரு மாதரசியைக் கரம்பிடிச்சதால உலகமே கொண்டாடுகிற ஒரு ஆழ்வார் ஸ்தானத்துக்கு உயர்ந்து நின்னாரு..! காதல்னா அப்படியில்ல வாழ்க்கையில் ஒரு ஆணை உயர்த்தணும்?! அப்படி திருமங்கையாழ்வார் குமுதவல்லியாரை எத்தனையோ இடையூறுகளையும் தாண்டி கரம்பிடிச்சி.. காதல்ல ஜெயிச்ச அந்த தினத்தை நாம காதலர் தினமா கொண்டாடினாத்தான் என்ன..? எப்படியும் காதலர் தினம்னு ஒரு தினத்தை நாம கொண்டாடுறதுதான் நோக்கம்னா… இப்படி ஒரு இந்தியத் தனமான காதலர் தினத்தை… அல்லது திருமங்கை மன்னரைப் போன்ற தமிழர்த்தனமான காதலர் தினத்தைக் கொண்டாடினாத்தான் என்ன….? எப்படி நம்ம ஐடியா…?

Related articles

Recent articles

spot_img