தூய்மையின் தூதுவர் – சந்த் காட்கே (பாபா) மஹாராஜ்

Published:

sant gadge baba - 2026

-ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்

மஹாராஷ்டிர மாநிலம் துறவிகளின் பூமியாக இன்றும் கருதப்படுகிறது. துறவிகளில் சந்த் காட்கே (Gadge) மஹாராஜ் ( பாபா) மிகவும் பிரசித்தியானவர். கீர்த்தனைகளைப் பாடுபவராய் அவர் இருந்தாலும் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவே அவர் பார்க்கப்பட்டார். தூய்மையின் தூதுவராக மக்களுக்கு தூய்மையின் மகத்துவத்தை வலியுறுத்துவதில் அவர் பெரும்பங்கு வகித்தார். இன்று பிப்ரவரி 23 – ஆம் நாள் அவருடைய 148-வது ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.

காட்கே பாபா அமராவதி மாவட்டத்தில் உள்ள ஷேண்ட்காவ் என்னும் இடத்தில் ஜிங்ராஜி மற்றும் சகுபாய் தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய இயற்பெயர் தேபு. அவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு அவர் தன்னுடைய மாமாவின் வீட்டில் வளர்ந்தார். வறுமையால் வாடினாலும் கல்வியின் மகத்துவத்தை அறிந்தவராய் இருந்தார். பொது சேவையே அவரது குறிக்கோளாய் இருந்தது.

1892 – ஆம் ஆண்டு குந்தாபாய் என்பவருடன் காட்கே பாபா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர்.

தனது 39-வது வயதில் காட்கே மஹாராஜ் துறவறம் பூண்டவாறு தன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் விட்டு விலகினார். நமது தமிழ் மொழியின் நாடியான ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்பதற்கிணங்க காட்கே பாபா அனைவரும் தன் உறவினர்கள், முழு உலகமும் தன் வீடு என்று எண்ணிக்கொண்டு கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டே கிராமம் கிராமமாக சென்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சமுதாயத்தில் இருந்த அறியாமை, மூடநம்பிக்கை, சில தேவையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை அகற்ற தன் கீர்த்தனைகள் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ‘கோபாலா கோபாலா தேவகி நந்தன கோபாலா’ என்ற பாடலே அவருடைய விருப்பமான பாடலாய் இருந்தது. அவரது நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் காலில் விழ வந்த மக்களிடம் ” என் காலில் விழுந்தென்ன பயன். நீங்கள் நல்ல அறத்தை கற்க வேண்டும்,” என வலியுறுத்தினார். கிராமங்களில் சுத்தத்தையும், சுகாதரத்தையும் விரும்பிய காட்கே மஹாராஜ் தான் செல்லும் இடங்களில் எல்லாம் துடைப்பத்துடன் சென்று அவ்விடங்களை சுத்தம் செய்தார்.

புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் எல்லாம் அவர் உழைத்தும், உதவி கேட்டும் தர்மசாலைகளை காட்கே பாபா கட்டினார். குழந்தைகளுக்காகவும் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் என கட்டினார். கிராம மக்களுக்கு உழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களின் வாழ்வை மேம்படுத்தினார்.

காட்கே பாபாவின் பின்வரும் கருத்துகள் இன்றும் ஏற்புடையதாகவே உள்ளன:
தூய்மையே ஆரோக்கியமானது,
பசித்தவர்களுக்கு உணவளித்தல், தாகத்திற்கு தண்ணீர், வீடில்லாதோர்களுக்கு தங்குமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கு மருந்து தருதல், விலங்குகள், பறவைகளை பாதுகாத்தல், பறவை, விலங்குகளை பலியிடுவது தவிர்த்தல், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, ஏழைகளுக்கு கல்வி கற்க உதவுதல், மனச்சோர்வடைவர்களுக்கு தைரியம் அளித்தல், கல்வியே சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி, மனிதருக்குள் பாகுபாடு கூடாது, தர்மம் பெற கையை நீட்டக் கூடாது, கொடுக்கவே கையை நீட்ட வேண்டும், திருடுதல் கூடாது, கடன் வாங்கக் கூடாது, போதைக்கு அடிமையாக கூடாது – என்பன சில.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

சந்த் காட்கே பாபா அமராவதி அருகில் வல்காவ் என்னும் இடத்தில் டிசம்பர் 20 1956 – ஆண்டு இயற்கை எய்தினார்.
தான் கல்வி கற்காவிடிலும் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அறியச் செய்த தெபுவின் நினைவை போற்றும் வகையில் அமராவதியில் இருந்து இயங்கும் பல்கலைகழகத்திற்கு சந்த் காட்கே பாபா அமராவதி பல்கலைகழகம் என்று பெயர் சூட்டப்பட்டுளளது.

தூய்மையின் தூதுவரான சந்த் காட்கே பாபாவின் பெயரில் மஹாராஷ்டிர மாநிலத்தில் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளும் கிராம பஞ்சாயத்துகளுக்கு காட்கே பாபா கிராம ஸ்வச்சதா விருதானது கிராம ஸ்வச்சதா மிஷனின் கீழ் வழங்கப்படுகிறது.

நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டும் நம்மால் சமுதாயத்திற்கு முடிந்த உதவிகளை செய்வதுமே நாம் சந்த் காட்கே பாபாவிற்கு செய்யும் அஞ்சலியாகும்.

Related articles

Recent articles

spot_img