எழுத அமர்ந்தால் வருவதில்லை! எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்! வேறென்ன…? கவிதைதான்! உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம். கடலைச் சென்று சேராத நதியைப் போல் மனதைச் சென்று தொடாத கவியும் வீண்! நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்! மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்! பார்வை சரி… வார்த்தைகள் வேண்டுமே! வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா? வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்! காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு! ஆம்…. ஆம்! கவி எழுதச் சொற்கள் அவசியமா? கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பல காலம்! எண்ணக் குதிரை பாய்ந்தோட… எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்! ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்! ரசித்துப் படித்தேன்… ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்! ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்! ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..! மொழியின் முன் மண்டியிட்டு வார்த்தை வரம் கேட்டேன் அரசியல் வாதிகள் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் கட்டுரையாளர்கள் சிலர் கேட்டு வாங்கிப் போனார்கள் மீதமிருந்ததை பேசவும் ஏசவும் மனைவியார் வாங்கிக் கொண்டார் தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என மொழி மிகவும் வருத்தியது. வேறு வழியின்றி வெற்றுக் காகிதத்தை மடித்து வழியில் என் காதலியிடம் தந்தேன். வாங்க மறுத்த அவள்… “வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என எனக்குத் தெரியும்” என்றாள். வார்த்தைகளே இல்லாத கவிதையை வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது…. “கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!
- ஏர்வாடியாரின் இந்தக் கவிதை ஏனோ எனை வாட்டிவிட்டது! ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே! உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!
கவிதை மொழியைக் காது கொடுத்துக் கேட்கலாமே… மூன்று கவிதை நூல்களின் இலக்கிய விமர்சனம்…. ஒலிவடிவில்…! [soundcloud url=”https://api.soundcloud.com/tracks/144044927″ params=”auto_play=true&color=ff5500″ width=”100%” height=”166″ iframe=”true” /]



