பெண்ணுக்குப் பேச்சே பிரதானம்! உலகம் சொல்லி வைக்கும் உண்மை நிலை! உன்னிலும் நான் கண்டேன் அந்த நிலை! செல்லும் செவியுமாய் ஒட்டிப் பிறந்த கர்ணிகள் போலே! உன்னிலும் நான் கண்டேன் அந்த நிலை! ‘செல்’லுக்கு ‘பில்’ கட்டுவது யாரோ? அதிசயித்துப் பேசும் உலகம்! உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஒருத்தி நீ! வாய்ப் பேச்சை வரமாய் வாங்கி வந்த நீ என் முகம் கண்டால் மட்டும் இறுக மூடிக் கொண்டாய்! அதரத்தின் திறப்பைக் காட்டின் உதிரம் உறைந்து போகுமோ? தெள்ளத் தெளிவாய் நீ இருந்தாலும் தெள்ளத் தெளிவாய்ப் பிறக்காத சொற்கள் உன்னிடம்! உன் மழலை மொழிகேட்க என் மனசோ ஏங்கித் தவிக்கும்! ஒரு தினுசாய் ஒதுங்கிப் போவாய்… புறக்கணித்து என்னைக் கொல்வாய்! பேச வேண்டிய நேரத்தில் மௌனமாய் நோகடிப்பாய்! மௌனமாக வேண்டிய நேரத்தில் காயப்பேச்சால் சாகடிப்பாய்! உன் உதட்டு அசைவுக்காய்க் காத்திருந்து உயிர் உருகிக் கிடக்கையிலே… உன் சமாதி நிலை மௌனத்தால் ஒவ்வொரு முறையும் நான் சமாதிக்குள் முடங்கிப் போனேன்! மழைக்காலத்தில் துளிர்க்கும் புல்பூண்டாய் எனக்குள் நானே மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்!
சமாதி நிலை: உனதும் எனதும்!
Popular Categories


