கதிரவனின் வெளிச்சக் கீற்று கண்களில் விழுந்து காலையில் எனை எழுப்பும்! கவனத்தில் நீ எழுந்து காதலில் எனை எழுப்புவாய்! முதல் காதலாய் என்னில் முகிழ்த்தவள் நீ! உன்னைப் பற்றி அறிந்திராத நாட்கள் அவை..! உன் முகம் நோக்கும் முன்னே… பளீரென்று வெளிக் கிளம்பும் பற்பசை விளம்பரப் புன்னகை உனது! செயற்கைக்கோள் தொலைக்காட்சி வரவால் செயற்கையாய் மாறிப்போன கிராமங்களில் அற்றை நாள் நான் கண்ட அழகு உனது! கிராமங்களும் தொலைத்துவிட்ட அபூர்வமான அதிசயம் நீ! ரம்யா… அழகின் பெயராய்ச் சூட்டி அழகு பார்த்தேன் நான்! படிந்து நடப்பாயோ தெரியாது… ஆனால், படிய வாரிப் பின்னலிட்டு இடுப்பு வரை நீளும் கூந்தல்… பணிந்து நடப்பாயோ தெரியாது… ஆனால், நிலம் நோக்கி நடந்து செல்லும் அமைதியான அழகுப் பார்வை… பொக்கை வாய்ச் சிரிப்பில் குழந்தைக்கும் கிழவிக்கும் கவர்ச்சி கூடும்! ஆனால், குமரி நீயோ… கன்னக் குழிச் சிரிப்பில் கவனத்தைக் கட்டிவிட்டாய்! கன்னங்கள் இரண்டிலும் பாலைவன மணல்மேடாய்க் குவியும் சதை! உப்பிய கன்னத்தில் மேட்டைக் கரைத்து காற்று வரைந்த வரிகள் போலே குழியும் கதை! கன்னக் குழிகளுக்குப் போட்டியாய் கண்களும் களத்தில் இறங்கும் – இமைகளின் ஓரத்தில் இரண்டொரு கீற்றாய் வெளிப்பட்டு! உன் கன்னக் குழி கண்ட நொடி என் நெஞ்சத்தில் குழி விழுந்து நேரலையாய் அசைபோடும்! கண்கள் கொண்ட காட்சியால் கருத்தும் ஈர்க்கப் பட்டிருந்தது! ஆனால்… மனம் உன்னிடம் முட்டிமோதியதில் மயக்கம் எல்லாம் மடிந்து போனது! உண்மைதான்…. உன்னைப் பற்றி அறிந்திராத நாட்கள் அவை! உன் செயல்… காதலில் விழுந்தவள் என்பதை உணர்த்தியிருந்தது! காதற் போர்வையில் காயப் படுதலையே கண்டவன் நான்! என் மொழி உனக்குக் கசப்பாய்த்தான் இருந்தது! நானும் அறிந்திருந்தேன்..! ஆனாலும்… மருத்துவர் புகட்டும் மருந்தைப் போல்… இலக்கியக் காதல்களை எடுத்து இயம்பினேன்! ஒரு நாள்… “காதல் என்றால் உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?” நன்றாய்த்தான் கேட்டாய்..! காதல் என்றால் இதுவென அறியாது காலம் கடத்தி வந்தவன் நான்! சித்தாந்தங்களில் சிக்கித் தவித்தவன்… சிக்கல் என்றே சிக்கித் தவிர்த்தவன்! காதல் என்றால் வாழ்க்கைச் சிக்கல்; பெண் என்றால் மனத்தில் சங்கடம் பெண்ணிடம் மனத்தை செலுத்தாதே… எல்லாம்… அறிவுரைகள்! அறிவுரைகள்! ஆனால் பெண்ணே… உன்னைக் கண்ட பின்னர் தான் காதலின் சுவை அறிந்தேன் நான்! நீ… பெண்மையின் அண்மையை எனக்குக் காட்டி உனக்குள் என்னைக் கரைத்தவள்! உன்னையே நினைக்க வைத்து என்னை நானே மறக்க வைத்தவள்! காதலுக்கு எதிரியாய் இருந்த என்னை நண்பனாய் மாற்றி உன்னையே காதலிக்க வைத்தவள்! விழிகளில் ஏற்றி வைத்த விளக்கெனவே என் காதல்..! அடிக்கும் ஊடல் காற்றால் அவ்வப்போது அசைகிறது தீபம்! உயிர்க் காற்று சிதறடித்தாலும் என்னில் அது அணையாது! ஆனால் பெண்ணே… உன் வாழ்க்கைப் பாதையின் நோக்கத்தில் சில.. இப்போதுதான் புரிபடுகிறது! போகட்டும்…! நம் காதலும் நட்பும்… புன்னகையில் போட்டு வைத்த எழிற் கோலம்! மவுனப் போர்களாய் மழை மேகம் பொழிந்தாலும் அழியாத கோலம்! ஒரு ஜென்மம் போகட்டும்… மறு ஜென்மம் ஆகட்டும்… தொடரும் பந்தம்! துவங்கும் சொந்தம்! ஆம் பெண்ணே … ஆம்! நான்… காதலனாய்த் தோற்றுவிட்டேன்! காதலில்தான் வென்றுவிட்டேன்!
இதயத்தின் ஒளியாய் நீ!
Popular Categories


