சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 28ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்திருக்கும்? அப்பல்லோவில் என்ன நடந்தது என்பது குறித்து பி.எச். பாண்டியன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று அண்ணா நகர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,
”ஜெயலலிதாவின் இழப்பு பேரிழப்புதான். அவரை நம்பித்தான் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது அடுத்த 24ஆம் தேதி மௌனம் கலைக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், இன்று உங்களைச் சந்தித்து எனது மௌனத்தைக் கலைத்துவிட்டேன்.
செப்டம்பர் 28ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா மயக்கம் அடைந்த நிலையில், நீர்ச்சத்து இல்லாமல், நினைவிழந்த நிலையில் அப்பல்லோ மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது என்ன நடந்திருக்கும் என்பதை எல்லோரும் யூகிக்கிறார்கள்.
அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் செய்தி வெளியான போது ஜெயலலிதா போயஸ் கார்டனில் மன அழுத்தத்தோடு இருந்ததாகவும், வாக்குவாதம் நடந்தபோது கைகலப்பில் முடிந்து அவர் கீழே விழுந்ததாகவும், ஆனால் அவரைத் தூக்க யாரும் முன்வரவில்லை என்பதையும் தான் நான் அறிந்தேன்.
தடய அறிவியல் படித்த மருத்துவர்களும், வழக்குரைஞர்களும் இதனை அறிவார்கள். வீட்டில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என்பதால்தான் அவர்கள் மருதுவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பேசும் போது, அம்மாவுக்கு ஒன்றுமில்லை, மூச்சு விடுவதில் சிரமம், மாலை வீடு திரும்புவார் என்றுதான் சொன்னார். அடுத்த நாளும் இதையேதான் சொன்னார்கள்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அடுத்த நாளே நான் அப்பல்லோ சென்றேன். நுழைவாயிலில் காவல்துறையினர் இரண்டு விதமாக அமர்ந்திருந்தார்கள். பிரவுன் மற்றும் நீலநிற காவலர்கள் மட்டுமே மருத்துவமனைக்குள் இருந்தனர். காக்கி காவலர்கள் வெளியே நின்றிருந்தார்.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அறை இருந்த அதே தளத்தில் உள்ள மருத்துவர்கள் அறைக்குச் சென்று அவர்களிடம் விளக்கம் கேட்கச் சென்றேன். ஆனால், ஜெயலலிதாவின் உடல் நன்றாக இருப்பதாகக் காவலர்கள் கூறினார்கள். அதனால் வீடு திரும்பி விட்டேன். தினந்தோறும் இதுவே நடந்தது.
நீண்ட நாட்களாக அப்படியே ஆனது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை. மருத்துவமனைக்குச் சென்றாலே காவலர்கள் ஓடி வந்து அம்மா நன்றாக இருக்கிறார், சாப்பிடுகிறார், பேசுகிறார் என்று அவர்களாகவே சொல்வார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆனால், டிசம்பர் 5ம் தேதி மாலை எங்களிடம் வந்து பிரதாப் ரெட்டி உள்ளிட்ட மருத்துவர்கள், எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இறைவனிடம் பிரார்த்திப்போம். செயற்கை சுவாசக் கருவியை பொருத்தியுள்ளோம் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். ஆனால், அப்போது அமைச்சர்கள் யாரும் கண்ணீர் விடவில்லை. கதறவில்லை. இதை கண்ணால் பார்த்தேன். சசிகலா உறவினர்களுடன் ஐசியுவுக்குள் சென்று உடனடியாக அங்கிருந்து திரும்பினார்.
பிறகு எய்ம்ஸில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு மூளைச் சாவு ஏற்படவில்லை. எனவே அவரை உயிர்ப்பித்து விட முடியும் என்று சொன்னதும் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அவர் மரணம் அடைந்து விட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் என எல்லோரும் சென்று பார்த்தார்கள். அப்போதும் எங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. ஐசியுவில் இருந்து போயஸ் தோட்டத்துக்குக் கொண்டு செல்ல லிப்டுக்கு வந்த போதுதான் ஜெயலலிதாவின் உடலைப் பார்த்தோம்.
அங்கிருந்து ராஜாஜி மண்டபத்துக்குச் சென்றோம். அங்கு ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி, 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று கூறி யாரை எல்லாம் வெளியே அனுப்பினாரோ, அவர்கள் எல்லாம் அங்கே நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்து கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன்… என்று கூறினார் பி.எச்.பாண்டியன்.