சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை: கடன் தொல்லை காரணம்?

Published:

சென்னை: சின்னத்திரை தொடர்களின் இயக்குநர் பாலாஜி யாதவ் சென்னையில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் கடன் தொல்லை என்று கூறப்படுகிறது. டப்பிங் செய்யப்படும் தொடர்கள் அதிகரித்து வருவதால் பாலாஜி யாதவ்க்கு சரியாக வேலை வாய்ப்பு அமையவில்லையாம். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பாலாஜி யாதவ் தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது மனைவி கிருஷ்ணவேணி கூறியுள்ளார். தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பாலாஜியின் உடலை விருகம்பாக்கம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாலாஜி யாதவ் உடல் இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாஜி யாதவ் உடலுக்கு சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் உள்பட நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினர் உயிரிழந்த பாலஜி யாதவ் (45) சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ‘லட்சுமி’, ‘துளசி’, ‘பயணம்’, ‘பந்தம்’, ‘உறவுகள்’, ‘அரசி’, ‘காயத்ரி’, ‘புகுந்த வீடு’, ‘செல்வி’, ‘ரோஜா’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார். பாலாஜிக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில் ஹர்ஷிதாவை 2 மாத கைக்குழந்தையாக வடபழனி கோவிலில் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். அண்மையில் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் டப்பிங் தொடர்கள் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் அதிகளவில் ஒளிபரப்பாவதால் அவருக்கு நேரடி தமிழ் தொடர்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. கடந்த 6 மாதமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வீட்டுக்கான கடன் தவணை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வங்கியில் இருந்து வீட்டுக்கான கடன் தொகையை செலுத்தாவிடில் ஜப்தி செய்வதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுதான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டப்பிங் தொடர்களால் தாங்கள் பாதிக்கப் படுவதாக சின்னத்திரைக் கலைஞர்கள் தெரிவித்தனர். அண்மைக் காலமாக பிறமொழித் தொடர்கள் காரணமாக தமிழில் உள்ள கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஆகவே தொலைக்காட்சிகள் மொழிமாற்றம் செய்யும் தொடர்களை ஒளிபரப்பக்கூடாது என்று பலரும் வலியுறுத்தினர்.

Related articles

Recent articles

spot_img