ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய தனது மகள் ஜெயலெட்சுமி மற்றும் மருமகள் சங்கரி ஆகியோருடன் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு இன்று காலை
சென்றனர்.
இதனிடையே அவர்கள் கொண்டுவந்த பணமுள்ள பேக்கை ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. சங்கரி என்பவர் மருத்துவமனை வாசலுக்கு வந்து மருத்துவமனை காவலாளியிடம் விசாரித்து அருகில் உள்ள மேலூர் சோதனைச் சாவடிக்கு சென்று அங்கு பணியில் இருந்த முதல் நிலை காவலர் ஜான்பாலிடம் தகவலை கூற, அவர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், புதூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
காவல் துறையினர் உடனடியாக காவல் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி, நகர் முழுவதும் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை உஷார் படுத்தினார்.
மருத்துவமனைக்கு வந்து கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து அதில் பதிவான வாசகம் மற்றும் வாகன பதிவு எண்ணை வைத்து புதூர் பகுதி ஆட்டோ சங்க செயலாளரிடம் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த ஆட்டோ புதூர் பகுதியை சேர்ந்த அன்வருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
அதன்பின் அன்வரிடம் விசாரிக்க அவர் வைத்துள்ள 5 ஆட்டோக்களில் இதுவும் ஒன்று என்பதும் ஆட்டோவின் டிரைவர் வைரமுத்து என்பதும் தெரியவந்தது.
உடனடியாக ஆட்டோ ஓட்டுனரை தொடர்பு கொண்டு பேசியதில் அவர் ஆட்டோவில் பேக் இருப்பதையும், இதுவரை பேக் இருப்பதை கவனிக்காமல் இருந்ததையும் தெரிவித்தார்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனரை மேலூர் சோதனைச் சாவடிக்கு வரச் சொல்லி பேக் சங்கரி என்பவரிடம் புதூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
சங்கரி, பேக்கை சோதனை செய்து பார்த்ததில் பணம் ரூ.69,100 சரியாக உள்ளது என்பதை தெரிவித்தார். சம்பவம் நடந்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பேக்கை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல் அதிகாரிகளை மதுரை மாநகர் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.
செய்தி… கே.சி.சாமி