ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட, திமுக., மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையே என்று பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறி, ரஜினி கூறிய கருத்துக்கு ஆமோதித்துள்ளார் ஹெச்.ராஜா.
கடந்த காலங்களில் திமுக., வெற்றி பெற்ற தேர்தல்களைப் பார்த்தால், மக்களுக்கு திமுக., மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை என்பதையே காட்டுகிறது. அண்ணா மறைவுக்குப் பின் வந்த அரசும், அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின் 1989ல் வந்த அரசும், வெற்றிடம் இருந்ததால் தான் திமுக.,வுக்கு சாத்தியமானது. ஆனால், பின்னர் 1996, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், ஜெயலலிதாவின் ஜோடி செருப்புகளையும், அணிந்திருந்த பட்டுப் புடைவை நகைகளை அடிக்கடி கட்சி டிவி.,யான சன் டிவி.யில் காட்டி, ஆளும் முதல்வர் மீது தனிப்பட்ட வெறுப்பை வளரச் செய்து அதன்படியே ஆட்சிக்கு வந்தது.
ஆனால் அவ்வாறு வந்தபின்னரும், மத்திய அரசில் இணைந்து, குடும்பத்தினருக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொண்டது. மிகச் சிறந்த தொண்டர்களைக் கொண்ட, கட்டுக் கோப்பான கட்சி என்றெல்லாம் பெயரெடுத்தும், வாக்குச் சாவடிகளில் மல்லுக்கு நிற்பவர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் இனத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் இருந்தும் கூட, திமுக.,வால் ஜெயலலிதா என்ற பெண்மணியுடன் மோத இயலவில்லை. 2011, 2016 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது.
இத்தகைய பின்னணியில் ரஜினியின் கருத்து குறித்து பதிவு செய்துள்ள ஹெச்.ராஜா, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு..
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என திரு. ரஜினி காந்த் அவர்கள் கூறியுள்ளது உண்மை. ஏனெனில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பின்பு கூட திமுக மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை என்பதையே RKநகர் எடுத்துக் காட்டியுள்ளது.
— H Raja (@HRajaBJP) March 6, 2018