சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் உடலுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, வெள்ளிக்கிழமை இன்று இரவு சிகிச்சை பலன் இன்றி காலாமானார். அவரது உடலுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே காடுவெட்டி குரு மறைவுக்கு பாமக., சார்பில் ஒரு வாரத்துக்கு துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் குரு அவர்கள் மாரடைப்பால் இன்று இரவு காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பா.ம.க. சார்பில் ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
துக்கம் கடைபிடிக்கப்படும் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். பா.ம.க. சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பா.ம.க. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதை பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துக் கொள்கிறது. – என்று கூறப்பட்டிருந்தது.



