சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில்,
நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
ஆகவே, கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்… – என்று கேட்டுக் கொண்டார்.
இதனிடையே நேற்று நள்ளிரவில் காவிரி மருத்துவமனையில் இருந்து தொண்டர்களை போலீஸார் அப்புறப் படுத்த முயன்ற போது தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து தொண்டர்களைக் கலைக்க லேசான தடியடியும் நடத்தப் பட்டது.
ஸ்டாலின் நேற்று நள்ளிரவு பதிவு செய்த டிவிட்டர் பதிவு…
காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே, கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல், அமைதி காக்க வேண்டுகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) July 29, 2018




