கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தெத்துப்பட்டி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பித்துரை பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தம்பித்துரை, அதிமுக.,வின் நிலைப்பாடு குறித்து பலர் தற்போது கேட்கின்றனர். நான் தெளிவாக சொல்வது அம்மாவின் கொள்கைகளின்படி தான் நடைபெறும் தேர்தல்களிலும் பின்பற்றும். ஆகவே 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், 2016 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனவே வரும் தேர்தல்களிலும் ஏதாவது கூட்டணி என்றால் அது தலைமைதான் முடிவெடுக்கும்,
பாஜக., வின் கதவை நாங்கள் தட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பாஜக.,வின் கதவுகளைத் தட்டுவது தி.மு.க வினர் தான்!
கலைஞரின் நினைவேந்தல் நடைபெறும் போது, அமித்ஷாவை அழைத்தார்கள். அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பாஜக., வினரை அழைக்கவில்லை! ஆனால் திடீரென்று அழைத்ததன் காரணம் என்ன என்று பார்த்தால் தெரியும். அதே நேரத்தில் அழகிரியின் பேரணியின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ சோதனை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வீட்டில் ரெய்டு என்று நடக்கின்றது. எங்கள் கட்சியின் மீது களங்கம் ஏற்படுத்த இன்று போராட்டம் நடத்துகின்றார்கள். எனவே பா.ஜ.க கதவை தி.மு.க தட்டுகின்றது.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உறவு நன்கு உள்ளது. உள்ளாட்சித் துறைக்கு தேவையான நிதி ரூ.1390 கோடி தந்துள்ளார்கள். இரு ஆட்சிக்கு நடுவில் நல்லுறவு உள்ளது. அதே நேரம் அரசியலில் பாஜக.,வுக்கும் அதிமுக.,வுக்கும் இப்போது எந்த ஒரு கூட்டணியும் இல்லை! மறைமுகமாக திமுக.,வினர்தான் பாஜக.,வினருடன் செயல்பட்டு கூட்டணி அமைக்க ஏதுவாக இருக்கின்றனர் என்றார்.




