தந்தை எரித்து கொலை: மகள் வெறிச்செயல்..!

கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்னையில் தந்தையை மகள் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் சுப்பையா(68). இவர் நாலாட்டின்புத்தூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். கயத்தாறு ஒன்றிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.இவரது மனைவி அந்தோணியம்மாள்(64). இவர்களது மகள் மூக்கம்மாள்(45). மகன்கள் நாராயணசாமி(42), ரகுராமன்(40), ராமமூர்த்தி(38). இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மூக்கம்மாள் கணவன் திருச்சி பகுதியை சேர்ந்த காந்திராஜ்(48). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்
. இந்த நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுக்கு முன் கணவரை பிரிந்து நாலாட்டின்புத்தூருக்கு மகன்களுடன் மூக்கம்மாள் வந்துவிட்டார்.
ஆனால் பெற்றோர் வீட்டில் தங்காமல் அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். மூக்கம்மாள் கணவரை பிரிந்து வாழாவெட்டியாக இருப்பது கண்டு மிகவும் வருத்தம் கொண்டனா். இதுகுறித்து மகளிடம் கணவருடன் சோ்ந்து வாழும்படி எவ்வளவோ எடுத்து கூறி பார்த்தார்கள். ஆனால் மூக்கம்மாள் பிடிவாதமாக கணவருடன் வாழமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், மூக்கம்மாள் பெற்றோரிடம் அடிக்கடி குடும்ப செலவுக்காக அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தகராறை பார்த்து சுப்பையாவின் மனைவி அந்தோணியம்மாள் ஒரு ஆண்டுக்கு முன் வெளிநாட்டில் உள்ள மகன் ரகுராமன் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார். இதனால் ஊரில் தனியாக வசித்த சுப்பையா ஓட்டல்களில் சாப்பிட்டு வந்துள்ளார்.
தந்தை தனியாக இருக்கிறாரே என்று கவலைப்படாத மகள் மூக்கம்மாள் அவரிடம் பணம் கறப்பதில் மட்டும் குறியாக இருந்துள்ளார். இவரது தொல்லை தாங்க முடியாத சுப்பையா, இனி பணம் கேட்டு என்னை தொந்தரவு செய்யாதே என மகளை கண்டித்திருக்கிறார். ஆனாலும் மூக்கமாள் விடாமல் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். .
இந்த நிலையில் கடந்த 3ம்தேதி அதிகாலை பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த மூக்கம்மாள் புறவாசல் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். பின்னர் தனது தந்தை காற்றுக்காக ஜன்னலை திறந்து போட்டு தரையில் பாய் விரிந்து தூங்குவதை பார்த்தார். அப்போது தான் கொண்டு வந்த பெட்ரோலை ஜன்னல் வழியாக நைசாக கொட்டியுள்ளார். பெட்ரோல் வழிந்தோடி சுப்பையா உடலில் பட்டபோது மூக்கம்மாள், தீப்பெட்டியை உரசி போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் சுப்பையா அலறியபடி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடல் கருகிய சுப்பையாவை மீட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு சுப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நலாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூக்கம்மாளை தேடி வருகிறார்கள். தந்தையை மகள் எரிந்து கொன்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


