
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி என்ற ஊரில் உள்ள ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள். இதில் 2-வது மகன் பாலன் (வயது 25). பொறியாளரான இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
பைக் பத்தமடை பஸ்நிலையம் அருகே சென்றபோது எதிரே நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி அசுர வேகத்தில் வந்த மினிலாரி மோதியதில், பைக்கிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலைப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பாலன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



