கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப் பட்டுள்ளது சத்தியமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த நபர் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த தேவி என்பவர் கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். சமையல் வேலை செய்து தன் வாழ்க்கையை ஓட்டி வந்த இவரது மகனும், மகளும் வெளியூரில் உள்ளனர்.
இந்நிலையில் தேவிக்கும், மணி என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இரு நாட்கள் முன் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர் என்று கூறப் படுகிறது.
மது போதை தலைக்கு ஏறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் தேவியின் தலையில் பெரிய கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு, மணி தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பவானி சாகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய மணியை போலீஸார் தேடி வருகின்றனர்.