சர்மாவிற்கு பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா இந்தியாவில் கர்னால் என்ற ஊரில் 1961-ம் ஆண்டு ஜனவரி 7-ம் நாள் பிறந்தார். ஆண்கள் மட்டுமே ஈடுபடும் விண்வெளித் துறையில் 1982 முதல் பெண் பொறியாளராய் கல்லூரியில் முதலிடம் பெற்றவர் கல்பனா. இந்தியப் பல்கலைக் கழகங்களில் விண்வெளி தொடர்பான சிறப்புத் துறைகள் இல்லாத காரணத்தால் வெளிநாட்டுக்குச் சென்றார்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) முதுகலைப் பட்டம் பெற்றார். 1988-ல் பொறியாளர் பட்டம் பெற்ற அவர் `பைலட்’டாக மட்டுமின்றி வான ஊர்தி மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றபின் 1994-ல் நாசாவில் பலசுற்று நேர்முகத் தேர்வு மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் 2962 பேரில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 நாட்கள் விண்வெளிப் பயணம் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் மேற்கொள்ளப்பட்டது. `நாசா’வைப் பொறுத்தவரை கல்பனாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வித் தகுதிகள் போட்டியின்றி அவரைத் தேர்ந்தெடுக்கச் செய்தன. ஆறு விண்வெளி வீரர்களைக் கொண்ட அவ்விண் காலத்தில் இடம்பெற்ற இரு வல்லுனர்களில் கல்பனாவும் இருந்தார். அக்குழுவில் இருந்த ஒரே பெண்மணி அவர்.

அவ்விண்கலத்தின் 50 அடி நீள எந்திரக்கையைக் கட்டுப்படுத்துவதும், பிற வீரர்களுடன் ஆறுமணிநேர விண்வெளி நடைப் பயணத்தை ஒருங்கிணைப்பதுமே அவரது பணி. நேரத்தைக் கணக்கிட்டு, கலத்தை எங்கு செலுத்த வேண்டும் என்று அவர் வழி நடத்துவார். ஒரு சமயம் இரு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஓடத்தை அதன் இடத்துக்கு கொண்டுவர இயலாமல் தவித்துப் போனார்கள்.

கல்பனா சென்று விண்கலத்தை உறுதியாய் பற்றியிழுத்து சரியான நிலைக்குக் கொண்டு வந்தார். இது அவருடைய ஈடுபாட்டை, மன உறுதியைக் காட்டுகிறது. அவரது குழு இருபத்தைந்து சோதனைகளுக்கு மேல் மேற்கொண்டு பவுதிக ஆய்வுகளை நிறைவு செய்தது. விண்வெளியின் எடையற்ற சூழல், மண்ணுலக செயல்பாடுகளைப் பாதிக்கும் விதம் மற்றும் சூரியனின் வெளிப்புறச் சூழல் ஆகியவையே அப்பயணத்தின் முக்கிய சோதனை அம்சங்களாய் விளங்கின.

விண்வெளித்துறையில் வெற்றி கண்ட அமெரிக்கப் பிரஜையான கல்பனா ஜீன் பியரி என்னும் அமெரிக்கரை மணந்தார். அவரும் அத்துறையிலேயே பயிற்சியாளராய் பணியாற்றியவர். 2003 பிப்ரவரி 1-ம் நாள் கல்பனா சாவ்லா உள்பட ஏழு பேர் கொலம்பியா விண்கலத்தில் 16 நாள் ஆய்வை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருக்கும் பட்சத்தில் நான்காகப் பிளந்து வெறும் பழுப்புப் புகையாக துண்டு துண்டாக டல்லாஸ் நகரம் முழுவதும் சிதறி விழுந்தது. விலைமதிப்பற்ற ஏழு விஞ்ஞானிகளும் பலியாயினர். கல்பனாவின் மறைவுக்கு இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending