- 1.தொலைக்காட்சியைப் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
மிகவும் கடினமான காரியம். தொலைக்காட்சி முன்னால் ஆடாமல் அசையாமல் நாள் முழுவதும் உட்காருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதில் என்ன தவறு என்பவர்களுக்கு: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது நமது மூளை மூடிக்கொண்டு விடுகிறது. அதீதமான கற்பனைகள், நடைமுறைக்கு ஒவ்வாத கதைக்களம் எல்லாம் மூளையை சோர்வடையச் செய்கின்றன. நமது மனமும் கெடுகிறது. தொலைக்காட்சி பார்க்கும் அத்தனை நேரமும் எந்தவிதமான ஆரோக்கியமான பலனும் இல்லாமல் நமது உடலின் ஒரு பகுதியின் சக்தியை செலவழிக்கிறோம் நாம்.
2.தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் வேறேதாவது உருப்படியாகச் செய்யலாமென்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் நாம் நமது உடலைப் பற்றி பலவற்றைக் கற்கிறோம். உடற்பயிற்சிக்குப் பின் நமது வேலைத்திறன் பன்மடங்காக உயர்கிறது. நமது மனஅழுத்தம் குறைந்து புதிய சக்தி உண்டாகிறது. நமது கவனம் அதிகரிக்கிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது.
3.சவாலான புத்தகங்களைப் படியுங்கள்.
வழக்கமான, பிரபலமான புத்தகங்களைப் படிக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் இந்த மாதிரியான புத்தகங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை அதிகரிக்காது. உங்களது கற்பனையையும், எழுத்து வல்லமையையும் அதிகரிக்கச் செய்யும் புத்தகங்களை படியுங்கள். உங்கள் முழு கவனத்தையும் ஈர்க்கும் புத்தகங்களை வாசியுங்கள். இத்தகைய புத்தகங்கள் உங்களது உலகக் கண்ணோட்டத்தை மாற்றும். அழகான ஆங்கிலத்தில் உங்களை ஆழமாக சிந்திக்கவும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவும் உதவும். உங்களுக்குத் தெரியாத வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளத் தயங்காதீர்கள். அடர்த்தியான வாசகங்களைக் கண்டு பயம் வேண்டாம். நிதானமாக புரியாத இடங்களை திரும்ப வாசிப்பதன் மூலம் ஒரு எழுத்தாளரின் நடை உங்களுக்கு பழகிவிடும்.
இப்படிப்பட்ட புத்தகங்களை வாசித்துப் பழகிவிட்டால், சும்மா பக்கங்களை திருப்பித்திருப்பி படித்துக் கொண்டே போகும் புத்தகங்களை மறுமுறை படிக்க மாட்டீர்கள். துப்பறியும் நாவல்களை விட புதிய சிந்தனைகளை பெருக்கும் புத்தகங்கள் படிக்க படிக்க அலுப்புத் தட்டாதவை.
4.சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுங்கள்
நமது நினைவாற்றல் குறைய போதிய தூக்கமின்மையே காரணம். இரவு சீக்கிரம் தூங்க சென்று எட்டு மணிநேரத்திற்கு மேல் தூங்காமல் இருந்தால் மனம் உடல் இரண்டுமே புத்துணர்ச்சி பெறும். இரவு வெகு நேரம் கண்விழித்திருந்து, காலையில் நேரம் கழித்து எழுவது உங்களை சோம்பேறிகளாக்கும். விடியற்காலை பொழுது அமைதியைக் கொடுப்பதுடன், நமது உழைக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.
ஒரு பத்து அல்லது இருபது நிமிட குட்டித்தூக்கம் உங்கள் களைப்பைப் போக்கும். அதற்கு மேற்பட்ட நேரம் தூங்குவது சோம்பேறித்தனத்தை கொடுக்கும்.
5.தனிமையில் இருங்கள்
நமது வாழ்க்கை வெகு வேகமாகப் நகர்ந்து கொண்டே இருப்பதால் பல சமயங்களில் நமக்கு தனிமை என்பதே கிடைப்பதில்லை. அதை நாம் உணருவதுமில்லை. பல விஷயங்களில் மனம் செல்லுவதால் கவனச் சிதறல் ஏற்படுகிறது. தனிமை நமக்கு யோசிக்கவும், வேண்டாத எண்ணங்களை விலக்கவும் உதவுகிறது. நமது நினைவுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. நமது பொறுப்புகளை வரிசைப்படுத்தி எது முக்கியம் எது முக்கியமில்லை என்று பகுத்துணர வைக்கிறது. இதனால் அனாவசியமான விஷயங்கள் உங்களை தொந்திரவு செய்யாமல் இருக்கும். உங்கள் மனமும் இலேசாக இருக்கும்.
இதற்காக தனிமையில் காலை மடக்கி உட்கார்ந்துகொண்டு ‘ஓம்’ ஜபிக்க வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு தனிமையைக் கொடுக்கும் உங்களைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு வாய்ப்பு தேவை. தனியாக நடக்கலாம். மிகச் சிறந்த எண்ணங்கள் நடைப்பயிற்சியின் போது தோன்றுகின்றன. உங்களுக்கு எந்த முறை சிறந்தது எனப் படுகிறதோ அதை செய்யுங்கள்.


