நம்பிக்கை அளித்த மோடியின் யாழ். பயணம்: நூலகத்துக்கு நூல்கள் வழங்க உறுதி

Published:

modi-lanka1
யாழ்ப்பாணம் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்ப் பாரம்பரியப்படி அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு
 யாழ்ப்பாணம்: இலங்கையில் அனைத்து மக்களும் சம வாய்ப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கொழும்புவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் வந்தார். அப்போது, முன்னர் சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்துக்கு வந்து பார்வையிட்ட மோடி, யாழ். நூலகம் மீண்டும் சிறப்பைப் பெற தேவையான நூல்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். முன்னதாக, காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தினர்.  

முன்னதாக, இலங்கையில் அனுராதபுரத்தில், அசோக மன்னரின் மகளால் நடப்பட்ட போதி மரத்தின் அடியில் மோடி பிரார்த்தனை செய்தார். புத்தர் ஞானமடைந்த போதி மர கிளையை அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரை 2500 ஆண்டுகளுக்கு முன்பு அனுராதபுரத்தில் நட்டார். இந்தப் புகழ்பெற்ற மகா போதி மரத்தடிக்கு பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் சென்றனர்.அங்கு இருவரும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். காவி வண்ண ஆடையை மரத்தின் மீது போர்த்தினர். அப்போது ஏராளமான புத்த பிட்சுகள் மோடியை வரவேற்றனர். பின்னர் கி.பி.140-ம் ஆண்டில் ருவான் வெலிசேயா என்ற இடத்தில் நிறுவப்பட்ட ஸ்தூபியையும் அவர் பார்வையிட்டார்.  

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் அனுராதபுரம் போகிறேன். அத்துடன் தலைமன்னார், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்கிறேன். இன்றைய நாள் எனக்கு மிக சிறப்பான நாள்’ என்று கூறினார். அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் சென்ற மோடி, அங்கே மதவாச்சி-தலைமன்னார் இடையிலான புதிய ரயில் பாதையைத் துவக்கிவைத்தார். இந்த ரயில் பாதையை இந்தியன் ரயில்வே அமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த ஆகியவற்றை விளக்கி, பிரதமர் மோடியிடம் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலத்துக்குப் பின்னர் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், யாழ்ப்பாணம் வந்த மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கே யாழ். பொது நூலகம் அருகே அமையவுள்ள கலாச்சார நிலைய தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.

modi-house-pongal
யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் பொங்கப்பட்ட பொங்கல் பானையில் என்னவெல்லாம் போட்டீர்கள் என்று கேட்டபடி….
பின்னர் இந்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகட்டும் திட்டத்தை பார்வையிட்டு, வீடிழந்தவர்கள், ஏழைகளுக்கு வீடுகளை வழங்கினார். இந்திய அரசின் சார்பில் யாழ்பாணத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 27,000 வீடுகளை வழங்கிய மோடி, “இது மிகவும் அருமையான திட்டம். இது போன்ற திட்டம் குஜராத்தில் 2001ம் ஆண்டு பூகம்பத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 27,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 27,000 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சி.
modi-girl-wish
வீடு வழங்கும் திட்டத்தில், வீட்டினை ஒப்படைத்தபோது, பயனாளியின் சிறுமி தான் ஆசிரியை ஆக விருப்பம் தெரிவித்ததைக் கேட்டு மகிழும் மோடி…
modi-srilanka
வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், பயனாளி ஒருவரின் குழந்தையின் கன்னத்தை கிள்ளி மகிழும் மோடி!
இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் . இது எனது கண்களில் நீரை வரவழைக்கிறது. அவள் வருங்காலத்தில் ஆசிரியை ஆகி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சேவை செய்ய வேண்டும்… என்றார் மோடி. முன்னதாக, தனது பேச்சின் துவக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் துவக்கினார். அது அங்கிருந்த தமிழர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய மோடி, இன்னும் அதிக அளவில் இந்திய அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசின் உறுதியையும் எடுத்துரைத்தார்.

கொழும்பு திரும்பும் முன்னர், தமிழர் பிரதிநிதிகள், முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள், இந்திய வம்சாவளி தலைவர்கள் என பலரை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக்கேட்டறிந்தார். இது குறித்து தங்களது மகிழ்ச்சியை பிரேமசந்திரன் வெளிப்படுத்தினார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தம்முடன் பேசிய மோடி, தங்களின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பொறுமையாகக் கேட்டதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தம்மிடம் கூறியாதாகத் தெரிவித்தார். மோடியின் பயணம் தங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img