அரசியல் லாபம் கருதி கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா?

Published:

kadeswara subramaniam hindu munnani - 2026

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

நிலைமை இப்படி இருக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தான் ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு கோயில் நிலத்தை சொந்தமாக்கி அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

ஏற்கனவே சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் வக்ஃபு வாரியச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தற்போது தமிழகத்தில் பல கோயில்களும் கோயில் நிலங்களும் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என சொல்லி ஆக்கிரமிக்க முயலும் சிறுபான்மையினருக்கு இது ஆதரவாக அமையாதா?

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், வக்ஃபு நிலங்களிலும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான நிலங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என்று சொல்ல முடியுமா!

கோயில் நிலங்களை எடுக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர வேண்டும். எந்த ஒரு அரசும் நிரந்தரமல்ல. நேற்று இருந்த அரசு இன்று இல்லை. இன்று இருக்கும் அரசு நாளை இருக்காது. ஆனால் பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும் அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே திரு. எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் இந்து முன்னணி பேரியக்கம் துவங்கிய காலம் முதல் கோயிலுக்கோ, கோயில் நிலங்களுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் அதை தடுப்பதை தலையாய பணியாக செய்து வருகிறது.

எனவே உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

Related articles

Recent articles

spot_img