சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் கலையரசி, சென்னை இ-3 தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிகிறார்.
9 மாத நிறை கர்ப்பிணியான இவருக்கு உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லை. வளைகாப்பு நடத்த ஆள் இல்லையே எனத் தவித்தவருக்கு, காவலர்களே ஒன்றுசேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியைக் காவல்நிலையத்தில் நடத்தியிருப்பது நெகிழ்ச்சியுடன் பேசப்படுகிறது.
வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் எம்.சி.ரமேஷிடம் பேசினோம். `அந்தப் பெண் காவலருக்கு உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லை.
நீங்க எல்லோரும் சேர்ந்து எனக்கு வளைகாப்பு நடத்துறீங்களா?’ என எங்களிடம் கேட்டார்.
உடனடியாகக் களத்தில் இறங்கி, பூ மாலை பழங்களை வாங்கினோம். பிரசவத்துக்காக நாளை அவர் சேலம் செல்லவிருப்பதால், இன்றே வளைகாப்பு நிகழ்ச்சியை காவல்நிலையத்தில் வைத்து நடத்தினோம்.
இறுக்கமான பணிச்சூழலுக்கு மத்தியில், இப்படியொரு மகிழ்ச்சியான நிகழ்வு எங்கள் காவல்நிலையத்தில் நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பெருமை பொங்க.
இந்நெகிழ்ச்சியான நிகழ்ச்சியால் மகிழ்ச்சியில் பொங்கியது கலையரசி மட்டுமல்ல, தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு புகாரளிக்க வந்திருந்தவர்களும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.