அயோத்தி ராமர் கோவில் திருப்பணி பூமி பூஜையில் சமர்ப்பிப்பதற்காக கோவையில் இருந்து ஸ்ரீராம நாமம் மந்திர தொகுப்பு அனுப்பப்படுகிறது.
கோவையில் ஸ்ரீ ராம மந்த்ரா என்ற அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் 1,008 கோடி ‘ஸ்ரீராம நாமம்’ எழுத பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக ஒரு நோட்டு புத்தகத்தில் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான ஸ்ரீ ராமநாமம் எழுதுவதற்கேற்ப தயாரித்து பக்தர்களிடம் விநியோகிக்கப் பட்டது. மேலும், ஆண்டு தோறும் சீதாராமர் பட்டாபிஷேகத்தை கோவையில் நடத்தி அதில் ஸ்ரீ ராமபக்தர்களை பங்கேற்கச் செய்தது.
இந்த அமைப்பிடம் இருந்து நோட்டு பெற்று, அதில் ஸ்ரீராமஜெயம் எழுதி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அவ்வாறு 900 கோடி ஸ்ரீராம நாமம் எழுதி இந்த அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதில் ஐந்து லட்சம் எண்ணிக்கையிலான ஸ்ரீராமநாமம் எழுதிய புத்தகங்கள் ஆக.5 ஆம் தேதி அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி ஆலய திருப்பணி பூமி பூஜையில் சமர்பிக்கப்பட உள்ளன
இந்த மந்திரத் தொகுப்பை, வேதவாக்கு இதழாசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் தம்பதியிடம் கோவை ஸ்ரீராம மந்த்ரா அமைப்பு நிறுவனர் கோபிநாத், மாருதி நற்பணி மன்றத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.