பாஜக.,வின் மூத்த தலைவரும் முன்னாள் தமிழக மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, பொதுமக்களிடம் சென்று உதவிகள் வழங்கும் தலைவர்கள், பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று நிவாரணங்களை வழங்கும் தன்னார்வத் தொண்டர்கள் என பலரும் ஏதோ வகையில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ் ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனை அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரது பேஸ்புக் பதிவில், ‘நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்