திமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார்? நீளும் வார்த்தைப் போரின் பின்னணி!

Published:

edappadi-pazhanisamy-1
edappadi-pazhanisamy-1

நீட் வரலாறு : நீட் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்து நேற்று சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்ததாக இன்றைய நாளிதழ்கள் கூறுகின்றன. ஆனால் வாசகர்கள் யார் சொல்வது சரி என்பதைத் தீர்மானித்துக் கொள்ள ஏதுவாக எதிலும் முழு வரலாறு பேசப்படவில்லை என்று அறிகிறேன். அதன் காரணமாக இதை எழுதுகிறேன்

விதை விழுந்தது எப்போது?

2010 டிசம்பர் : திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது,  2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India –MCI) இந்திய கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானபோது திமுகவைச் சேர்ந்த செ.காந்திசெல்வன் சுகாதாரத்துறை துணையமைச்சராக (Minister of state for Health and Family Welfare) இருந்தார்

மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்திருப்பதாகச் சொல்லியது அந்த கெசட் அறிவிப்பு.

stalin edappadi
stalin edappadi

என்ன மாற்றம்?

எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (eligibility cum entrance test) நடத்துவது என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தங்களுடைய பாடத்திட்டத்திற்கும், MCI அறிவித்துள்ள பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி சில மாநிலங்கள் இதை எதிர்த்தன. (அவை அனைத்திலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் ஆட்சியில் இருந்தன) சமரச நடவடிக்கையாக தேர்வு ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

பின் மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடின

உச்சநீதிமன்றம் சொல்லியது என்ன?

ஜூலை 18 2013: 2010ஆம் ஆண்டு கெசட் அறிவிப்பு வந்ததுமே சிலர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத் தக்கது என்று தீர்ப்பளித்திருந்தனர்

இதை எதிர்த்துதான் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற அன்று அவரது கடைசித் தீர்ப்பாக தீர்ப்பு வெளியானது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வர்த்தகம் நடத்தும் உரிமையை மறுக்கிறது என்றும், இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மூவர் கொண்ட அமர்வில் மூவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே தீர்ப்பிற்கு ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு ஒருமனதான தீர்ப்பாக இல்லாமல் பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. தீர்ப்பின் வரைவு முறையாக விவாதிக்கப்படவில்லை கபீர் தான் ஓய்வு பெற இருப்பதால் அதில் வேகம் காட்டினார் என்று தவே கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமான இந்தத் தீர்ப்பு. 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. அன்றுதான் அல்டாமஸ் கபீர் ஓய்வு பெற்றார். இதுதான் நீதிபதியாக அவர் வழங்கிய கடைசித் தீர்ப்பு

பின்? : கபீரின் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போதும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது. (2014 மே வரை அது ஆட்சியில் இருந்தது)

2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி உச்சநீதி மன்றம் கபீர் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற்றது. 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது. நீட் மீண்டும் உயிர் பெற்றது

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

தமிழ்நாட்டில்…: 2017 – தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின் கீழ் ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்.

அவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞரும், திரு.ப.சிதம்பரத்தின் மனைவியுமான திருமதி.நளினி சிதம்பரம், திமுக அரசில் அட்வகேட் ஜெனராலாகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் ஆகியோரும் ஆஜரானார்கள். தமிழக அரசின் ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழக அரசிற்கு ஓர் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை மத்திய அரசு அட்டார்னி ஜெனரலுக்கு கருத்து கேட்டு அனுப்பியது. அவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை…

  • மாலன் நாராயணன், (மூத்த பத்திரிகையாளர்)

Related articles

Recent articles

spot_img