1 ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், கொரோனா வந்தாலும் பரவாயிலலை என எண்ணிக்கொண்டு அங்கு ஏராளமானோர் திரண்டனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் புதிதாக கடை தொடங்கப்பட்டுள்ளதால், அதன் சலுகையாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளார்.
அதாவது ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ எந்த வகையான மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன்படி நேற்று காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்.
இந்த கடைக்கு வந்தவர்களில் சிலர் மாஸ்க் அணிந்தும், பலர் அணியாமலும் இருந்தனர். அது போல் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
ரூ 1 க்கு மீன்கள் விற்கப்பட்டதால் காலையிலேயே கூட்டம் அலைமோதியது. நிறைய பேர் நிறைய மீன்களை கிலோ ரூ. 1 க்கு வாங்கிச் சென்றனர். இதனால் முதல் நாளில் அனைத்து மீன்களும் விற்று தீர்ந்தது.