train
train

குமரி மாவட்டம் குழித்துறை அருகே நேற்று அதிகாலை தண்டவாளம் மேல்செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் பாதை இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாகும். மின்ரயில் பாதையான இந்த பாதை வழியாக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் சென்று வருகின்றன.

தற்போது இந்த பாதையில் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இரணியல் மற்றும் குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட விரிகோடு பகுதியில் அதிகாலை 2.30 மணி அளவில் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்துள்ளது.

ரயில் கடந்து சென்ற சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் ரயில் பாதையில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்கம்பி அறுந்து விழுந்தவுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதனால் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

மதுரை புனலூர் ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு வரை சுமார் ஒன்றரை கிமீ தூரத்திற்கு மின்இணைப்பு சேதமடைந்திருந்தது . ரயில்வே ஊழியர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தற்காலிகமாக மின்கம்பியை சரிசெய்தனர்.

அதன் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை புனலூர் ரயில் ஆகியவை இயக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

ரயில்கள் கடந்து சென்றதும் மீண்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்கம்பி அறுந்துவிழுந்த விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கேட்டும் சம்பவம் நடந்தவுடன் பூட்டப்பட்டது.

இந்த ரயில்வே கிராசிங் வழியாக செல்லும் மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து
திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வழக்கமாக குழித்துறைக்கு மதியம் 1 மணிக்கு வரும். நேற்று இந்த ரயில் நெல்லையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருவனந்தபுரத்திற்கு இயக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஒரு ரயிலை தவிர, இந்த தடத்தில் பகல் நேரத்தில், அதாவது மாலை 6 மணிவரை வேறு ரயில்கள் எதுவும் இயக்கப்படுவது இல்லை. இதனால் பகல் 12 மணியளவில் மின்பாதையை முழுமையாக சீரமைக்கும் பணி தொடங்கி நடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending