கருணை மனு என்கிற தலைப்பில் ராமர் பிள்ளை வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் மூலிகையில் எரிபொருள் தயாரிக்க முடியும்; அதை வைத்து வாகனங்களை இயக்க முடியும் என்று கூறி பரபரப்பு கிளப்பியவர் ராமர் பிள்ளை. ஆனால் அது குறித்து அவர் செய்து காட்டிய சோதனைகள், அறிவியல் பூர்வமாக நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை! மேலும், மூலிகை ரகசியம் என்று கூறி, அதன் உள்ளார்ந்த விவரங்களை எடுத்துவைக்க ராமர்பிள்ளை முன்வரவில்லை; அவரால் இயலவில்லை. எனவே அவர் குறித்து அதன் பின்னர் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது விரக்தியின் எல்லையில் உள்ளார் ராமர் பிள்ளை. தான் கூறியதை இந்த உலகம் நம்பவில்லை என்பதால், கடும் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டு, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “மூலிகை பெட்ரோல் பற்றிய என் விளக்கத்தை வருகிற 10ம் தேதி அளிக்க இருக்கிறேன். எனவே, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை பெட்ரோலை தயாரித்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்புங்கள். அது போலியாக இருந்தால் என்னை சிறையில் அடையுங்கள். தூக்கில் கூட போடுங்கள்.
இல்லாவிடில், 11ம் தேதி நான் உயிரோடு இருப்பேனா, இல்லையா என்பது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை ஆகியோரின் கையில்தான் இருக்கிறது. இது பற்றி அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் பேச வேண்டும். மரணத் தறுவாயில் நின்று உயிர் பிச்சை கேட்கிறேன். இந்த ஏழை கண்டறிந்தது உண்மையா இல்லையா என அவர்கள் உலகிற்கு கூற வேண்டும். இதுதான் என் கடைசி வீடியோ. இதன் பின் நான் பேசப்போவதில்லை என உருக்கமாக பேசியுள்ளார்.

