வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம்!

Published:

vedantha desikar - 2026

வேதாந்த தேசிகர் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 1268ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் நட்சத்திரத்தில், புதன்கிழமை அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர்.

இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம். பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’, ‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’, ‘தூப்புல் பிள்ளை’, ‘உபயவேதாந்தாசாரியார்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகர்’ என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாத்தூர் அம்மாளின் நேரடிச் சீடரான் கிடாம்பி அப்புள்ளாரிடம் வட மறையான வேதங்களும், தென் மறையான திவ்விய பிரபந்தமும், புராணங்களும் மற்றும் சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.
ஏழாம் அகவையில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு, கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் அகவையில் திருமங்கை (கனகவள்ளி என்றும் அழைக்கப்படும்) எனும் நங்கையை மணம் புரிந்தார்.

தன்னுடைய இருப்பத்தேழாம் அகவையில் வைணவ குரு எனும் நிலையை அடைந்தார். பின்னர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி திருவஹீந்தரபுரம் (கடலூருக்கு அருகில்) சென்று சில காலம் வாழ்ந்தார். திருப்பதி, மேல்கோட்டை, காஞ்சிபுரம், அயோத்தியா, பிருந்தாவனம், பத்ரிநாத், திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.

இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருடங்கள் வாழ்ந்தார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இராமானுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு (124) நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

தமிழில் – அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம், ஸ்ரீவைஷ்ணவதினசரி, திருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார் சங்கிரகம், விரோத பரிகாரம், பன்னிருநாமம்

வடமொழியில் – பாதுகா சஹஸ்ரம், கோதாஸ்துதி, யதிராஜ சப்ததி, வைராக்ய பஞ்சகம், அபீதிஸ்தவம், ஆதிகாரண ஸாராவளி, அஷ்டபுஜ அஷ்டகம், பகவத் தியான ஸோபனம், பூஸ்துதி, சதுஸ்லோகி பாஷ்யம், தசாவதார ஸ்தோத்திரம், தயாசதகம், வரதராஜ பஞ்சாசத், தெய்வநாயக பஞ்சாசத், திவயதேச மங்களாசனம், கருட பஞ்சாசத், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், தேசிக மங்களம்

மணிப்பிரவாளத்தில் – அம்ருதரஞ்சனி ரஹஸ்யம், அஞ்சலி பிரபாவம், ஹஸ்திகிரி மஹாத்ம்யம், குருபரம்பரா சாரம், முனிவாகன போகம், ஆராதன காரிகா, ஊசல்பா ப்ராக்ருதத்தில் அச்யுத சதகம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

திருப்பாணாழ்வார் பாடிய ‘அமலனாதி பிரான்’ என்னும் பதிகத்துக்கு பெரியவாச்சான் பிள்ளை ஆணைப்படி இவர் அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் விரிவுரை நூல் செய்துள்ளார்.

வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரே.

முஸ்லீம்கள் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர்.

இவருடைய பாடல்கள் தேசிகபிரபந்தம் என்று அழைக்கப்படுவதோடு தினமும் பெரும்பாலான வடகலை வைணவர்களால் ஓதப்பட்டு வருகிறது. வடகலை வைணவத்தை பின்பற்றும் கோயில்களில் இவருக்கென தனி சன்னதியோடு முதல் வழிப்பாடும் நடத்தப்படுகிறது.

திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப் பெற்று வருகிறது. SwamiDesikan750

ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்!
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்!!

வாழி இராமாநுசப்பிள்ளான் மாதகவால்
வாழும் அணி நிகமாந்த குரு – வாழியவன்
மாறன் மறையும் இராமாநுசன் பாஷியமும்
தேறும்படி உரைக்கும் சீர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ ஞானியர்கள் சென்னி அணி சேர்
தூப்புல் வேதாந்த தேசிகனே! இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!

  • என்.ஆர்.வெங்கடேசன்

Related articles

Recent articles

spot_img