பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் 24 அடி உயர ஐம்பொன் வேல் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
பழநி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீராடும் புண்ணிய நதியாக விளங்குவது சண்முகநதி. உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பழநியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆறு போதிய பராமரிப்பில்லாமல் குப்பைகள் தேங்கி அசுத்தமடைந்து கிடந்தது.
இதனை சுத்தப்படுத்த வேண்டுமென பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பழநியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சண்முகநதி தூய்மை மற்றும் வழிபாட்டுக்குழு எனும் அமைப்பை உருவாக்கினர்.
இந்த அமைப்பின் சார்பில் சண்முகநதி ஆற்றுப்படுகை பக்தர்கள் நீராடும் அளவிற்கு சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின், மாதந்தோறும் கார்த்திகை நாளில் காசியில் ஓடும் கங்கா நதியில் நடைபெறும் ஆரத்தி பெருவிழாவில், சண்முகநதி ஆற்றிலும் நடத்தப்பட்டு வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சண்முகநதிக்கரையில் பிரமாண்டமான 24 அடி உயர ஐம்பொன்வேல் நிறுவப்பட்டது. வேலின் முகத்தில் ஒருபக்கம் ஆறுமுகத்தை குறிக்கும் நட்சத்திரமும், மறுபக்கம் ஓம்காரமும் பொறிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட இந்த வேல் சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மெய்த்தவம் அடிகள், கருடானந்த சுவாமிகள் மற்றும் சங்கராலயம் பாலசுப்ரமண்யசுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு சண்முகநதி தாய்க்கு சண்முகநதி தீபாராதனையும், அதைத் தொடா்ந்து வெற்றிவேலுக்கு முதல் திருமுழுக்காட்டும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரகாஷ் சுவாமிகள் தலைமை வகித்தாா். மெய்த்தவம் அடிகள் முன்னிலை வகித்தாா். அபிஷேக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளா்கள் காணியாளா்கள் பண்ணாடிராஜா, நரேந்திரன் உள்ளிட்டோா் செய்தனா்.