ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மலைப் பகுதியில் நீர்ப் பெருக்கு அதிகரித்தது.
இதன் காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கர் கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது மலைப்பகுதியில் மழை குறைந்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது சதுரகிரி. இங்கே சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் ஆகிய சுவாமிகளின் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில், அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட தலம் எனப்படுகிறது.
கரடுமுரடான பாதையில் செல்லவேண்டும் என்றாலும் இங்கு ஒரு முறையாவது சென்று பூஜை செய்வதை பெரும் புண்ணியமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
மதுரை, விருதுநகர் என இரண்டு மாவட்டங்களிலிருந்தும் சதுரகிரி மலைக்குச் செல்ல பாதைகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பக்தர்கள் திரளாக வருகிறார்கள். வனத்துறையின் முழுக்கட்டுபாட்டிலுள்ள இம்மலையில் முக்கிய நாள்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை அமாவாசை என்பதால், சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.