சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஆதிசங்கரரால் இந்து மதத்தை நிலை நிறுத்தவும் தர்மங்களை பரப்பவும் உருவாக்கப்பட்டது. அதில் அதன் பீடாதிபதிகள் மக்களுக்கு நற்சிந்தைனைகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் முப்பத்தி நான்காவது குருவாக இருந்த ஸ்ரீசந்தரசேகர பாரதி சுவாமிகள் மிகுந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள்.எப்பொழுதும் தன் தவநிலையில் பல வித அற்புதங்களை செய்பவர்.
ஒரு சமயம், அவர் எவரிடமும் பேசாமல், நிலைத்த பார்வையுடன் ஒரிடத்தில் இருக்க கண்டு, அவரின் இந்த யோகநிலையினை தவறாக புரிந்து கொண்டு சிலர் அவருக்கு புத்தி மாறுதல் அடைந்ததாக கருதி ஒரு மனநலமருத்துவரை வரவழைத்தனர். மருத்துவர் அவரை காண அவர் அருகே சென்றார்.
சுவாமிகள் மருத்துவரை தன் கை உயர்த்தி தடுத்தார்.பின் “நீ எனக்கு மருத்துவம் பார்ப்பது இருக்கட்டும் உன் அம்மாவை காப்பாற்று அவளுக்கு புற்றுநோய்” என கூறினார்கள்.
இதனைக் கேட்டு திடுக்கிட்ட மருத்துவர் வீடு வந்து தன் அம்மாவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினார்.அதில் அவர் தாயாருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாயிற்று.
பெரிய அளவில் மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத அக்காலகட்டத்தில் அதுவும் புற்றுநோய் போன்றவைகளுக்கு கேட்கவே வேண்டாம். உடனே இதனை கண்டு தெரிவித்த சுவாமிகளிடமே தீர்வும் இருக்கும் என அறிந்த மருத்துவர் அவரைக் காண வந்தார்.

ஸ்ரீசந்தரசேகர சுவாமிகளும் மருத்துவரிடம் கருணையோடு “நீ உன் தாயாரை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் சென்று நாற்பத்தியொரு நாட்கள் கடலில் குளித்து,ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணியபுஜங்கத்தைப் பாராயணம் செய்யுங்கள் என பணித்தார்,
ஒரு மண்டல காலம் ஆச்சாரியாள் சொன்னதை செய்து பின் மருத்துவ பரிசோதனைக்கு தன் தாயை உட்படுத்திய மருத்துவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.முன்பு தெரிந்த புற்றுநோய்கான எந்த சுவடுமின்றி அவர் தாயாரின் உடல் நலத்தோடு இருந்தது.
மீண்டும் தன் தாயாருடன் ஆச்சாரியாளை தரிசனம் செய்ய வந்த மருத்துவர்,நன்றியும் பக்தியுமாக சுவாமிகளை ஆனந்தக் கண்ணீருடன் வணங்கி சென்றார்.
ஜெய ஜெய சங்கர! ஹரஹர சங்கர !


