” நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!”
(தயாளச் செயல்களைப் பாராட்டுவதில் ரொம்ப
தாராளம்,!-தாயும் ஆன பெரியவாளுக்கு)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-143
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன்
பெண்ணை அழைத்துக் கொண்டு பெரியவாள்
தரிசனத்துக்கு வந்தாள்.
“ரொம்ப நாள் கழிச்சு முழுகாமல் இருக்கு. அதான்
கவலையாயிருக்கு. நல்லபடியா குளி குளிக்கணும்.
ரொம்பத் தொலைவிலேர்ந்து நடந்து வர்றோம்.
சாமி ஆசீர்வாதம் பண்ணணும்” -பெண்மணி
பெரியவாள் கையைத் தூக்கி ஆசி வழங்கினார்கள்.
தாயார் தொடர்ந்து பேசினாள்; ” நாங்க ரொம்ப
ஏழைங்க சாமி, முழுகாமல் இருக்கிற மவளுக்கு,
வாய்க்கு வேண்டிய பதார்த்தங்களை வாங்கிக்
கொடுக்கக்கூட முடியலை. பாதார்த்தங்களை வாங்கிக் கொடுக்கக்கூட முடியலை. சரியா சாப்பாடு போடவும் வசதியில்லை. அடுப்புச் சாம்பலை துண்ணுது.”
அந்த சமயம் ஸ்டேட் பாங்க் ரங்கநாதன், ஒரு டப்பா
நிறைய கட்டித் தயிர் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.
“நீயே அந்த டப்பாவை அந்த அம்மாகிட்டே
கொடுத்துடேன்.”- தயிர் டப்பா இடம் மாறியது.
கோபாலய்யர் (என்ஜினியர்) பிறந்தநாள் வழக்கப்படி,
ஒரு டின் நிறைய இனிப்பு – உறைப்பு தின்பண்டங்கள்
கொண்டு வந்தார். வேத பாடசாலை மாணவர்களுக்காக,
“கோபாலா! அந்த டின்னோட எல்லாத்தையும் அந்தப்
பெண்கிட்ட கொடுத்துடு..” – டின் இடம் மாறியது.
அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார்.
“அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா.
திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும்.
வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு.”
ராமுவுக்குப் பரம சந்தோஷம்! பெரியவாளே ஆக்ஞை பண்ணுகிறார்கள்! அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார்.
தாயும்,மகளும் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டுப்
புறப்பட்டு சென்றார்கள்.
அசோக் நகர் ராமுவைப் பார்த்து, “எவ்வளவு ரூபாய்
கொடுத்தே?” என்று பெரியவாள் கேட்டார்கள்.
பல பேர் எதிரில் தொகையைச் சொல்வதற்கு
அவருக்கு தயக்கமாக இருந்தது.
“பெரியவாள் சொன்னார்கள் என்றால், லட்சக்
கணக்கில் கொண்டு வந்து கொட்டுவதற்கு பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள்.நான் எம்மாத்திரம்?”
பெரியவாள்,ராமுவிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. சொல்லாமல்
தப்ப முடியாது.
“நாலாயிரத்துச் சொச்சம்தான் இருந்தது.அதைக்
கொடுத்தேன்…”
“நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க
சொல்லலையே” – பெரியவா
“இப்போவெல்லாம் டெலிவரிக்காக கவர்ன்மெண்ட்
ஆஸ்பத்திரிக்குப் போனால்கூட மூணு நாலு ஆயிரம்
ஆயிடறது..” – .ராமு என்கிற ராமன்.
சில நிமிஷங்களுக்குப்பின் பெரியவாள் சொன்னார்கள்;
” நீ வெறும் ராமன் இல்லே; தயாள ராமன்!”
“போதும்! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே
போதும்!” என்று நெஞ்சுருகச் சொன்னார், ராமு என்கிற ராமன்.பெரியவாள் தயாளச் செயல்களைப்
பாராட்டுவதில் ரொம்ப தாராளம்,!



