இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் திருவாமாத்தூர் என்னும் பழமையான திருத்தலம் உள்ளது. இங்குள்ள முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் ஆலயம் தேவார மூவரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது. அங்கே திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. ஆயிரம் சாட்சிகளை விசாரித்தும் உண்மை விளங்காத வழக்குகளை இந்தத் திருவட்டப்பாறை தீர்த்துவைக்கும் என்பர். சத்தியத்தை நிலைநாட்டும் பாறை. ஒரு சமயம், தன் தம்பியின் சொத்துகளை அபகரிக்க எண்ணிய அண்ணன் ஒருவன், இப்பாறைமுன் பொய்யுரைத்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். சில கல் தொலைவு சென்றதும், அவன் அம்மனை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, “திருவட்டப்பாறை தெய்வம் சீறிக்கொத்துமோ?’ என்று ஏளனமாகக் கேட்டான். அவ்வளவில் பூமியிலிருந்து வெளிப்பட்ட கருநாகம் ஒன்று சீறி அவனைக் கொத்தியது. அனைவரும் வியந்து நிற்க, அந்த நாகத்தின் தலை மட்டும் பூமிக்கு மேலே தெரியும் நிலையில் கல்லாக மாறியது. அந்த நாகம்மனை மக்கள் வழிபடத்தொடங்கினர்.
அவளே தும்பூர்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறாள்.
(இதன் வால் திருவாமாத்தூர் அம்மனிடம் உள்ளதாகக் கூறுகிறார்கள்).
ஆலயக் கருவறையில் நாகம்மன் எழுந்தருள, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டலட்சுமி மற்றும் நவகிரக சந்நிதிகளும் எழிலுடன் விளங்குகின்றன. கடந்த 16-9-2013 அன்று இங்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
“”இந்த நாகம்மனை உள்ளன்போடு வழிபட்டால், கண்ணிமைபோல நம்மைக் காத்தருள்வாள்” என்கிறார் ஆலய அர்ச்சகர் வெ. அபிராம சர்மா.



