ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு வசதி மேம்படுத்திட மத்திய, மாநில அரசு மெகா திட்டத்தை அமல்படுத்த உள்ளது என அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா, பொழுது போக்கு அம்சம், இலவச தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ராமேஸ்வரத்தில் சந்திரமோகன், தமிழக சுற்றுலாதுறை இயக்குனர் சந்தீப் நந்துாரி, ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா ஆகியோர் ராமநாதசுவாமி கோயில், ராமர்பாதம் கோயில், அக்னி தீர்த்தம் கடற்கரை, தனுஷ்கோடி கடற்கரையில்ஆய்வு செய்தனர்.
பின் சந்திரமோகன் கூறியதாவது :ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு வசதி மேம்படுத்திட மத்திய, மாநில அரசு மெகா திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
ராமர் பாதம் கோயிலில் பூங்காவுடன் கார் பார்க்கிங், கோயில் அருகில் 5 ஏக்கரில் கழிப்பறை, ஓய்வு அறையுடன் பிரமாண்ட கார் பார்க்கிங் அமைக்கப்படும்.
இங்கிருந்து பேட்டரி கார் அல்லது மினி பஸ்சில் பக்தர்களை ஏற்றி வரவும், அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் பூஜை செய்ய நவீன வசதியுடன் பந்தல் அமைக்கப்படும்.
மேலும் இரவில் கோயில் கோபுரங்களை காண பிரகாசமாக ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்தப்படும். அக்னி தீர்த்தம் அருகே கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு வாட்டர் ஸ்கூட்டர் படகு சவாரி ஏற்படுத்திடவும் ஆய்வு செய்துள்ளோம். இதற்கான திட்ட வரைவு அறிக்கையை அரசுக்கு அனுப்ப உள்ளோம் என்றார்.