மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டகப்படியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகரை
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கடந்த 16ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் அன்று இரவு வண்டியூர் வீரராக பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். பின்னர் அன்று இரவு நடைபெற்ற திருமஞ்சனத்தை தொடர்ந்து வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் வண்டியூர் வைகை ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடந்தது.சாப விமோசன நிகழ்ச்சியானது, வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்டபத்தில் நடப்பது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பதில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.40 லட்சம் செலவில் தேனூர் மண்டபம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 62 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள பழமையான தேனூர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது.இதன்பின் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதன்பேரில் நாரை பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள், வழக்கமாக வைகை ஆற்றுக்குள் கும்பல் கும்பலாக நிற்பார்கள். இதுவரை தேனூர் மண்டபத்தின் அருகில் வைகை கரையானது, புதர்மண்டிக்கிடக்கும். ஆனால் இந்த ஆண்டு, வைகை வடகரையில் அகலமான சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாப விமோசன நிகழ்ச்சியை பக்தர்கள் இந்த சாலையில் நின்று கண்டு களித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு
தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பட்டு இரவு ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளினார் கள்ளழகர். அங்கு இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முத்தங்கி சேவையில் துவங்கி ,தொடர்ந்து கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளித்தார்
இதே போன்று, வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தசாவதார வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை பல அவதாரங்களில் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பிற்பகலில் திருமஞ்சணமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதனை அடுத்து நாளை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அங்கிருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் கோயில் நோக்கி புறப்படுகிறார்.
அப்போது பல்வேறு மண்டகப்படிகளுக்கு எழுந்தருளும் கள்ளழகர் 20ஆம் தேதி காலை தனது இருப்பிடமான அழகர்மலை செல்கிறார். 21ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.இத்துடன் மாமதுரையில் சித்திரை பெருந்திருவிழா நிகழ்வுகள் நிறைவடையும்.










