மருத்துவ அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நபர், போலி டாக்டர் சிகிச்சையால் இறந்துள்ளார்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே இடையப்பட்டியை சேர்ந்த, 67 வயது முதியவர் கடந்த, 20ல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுத்திணறலுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு இறந்தார்.
இவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது, அங்குள்ள போலி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்துள்ளார் என, தெரியவந்துள்ளது.
இது குறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, போலி டாக்டர்கள் குறித்து, தொடர்ந்து சோதனை நடத்தினால் மட்டுமே, கண்டுபிடிக்க முடியும். ஆனால், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஜூன், 29ல் புன்னம் சத்திரத்தில் மளிகைக்கடை உரிமையாளர் கொரோனாவல் இறந்துள்ளார். அவரும், நொய்யலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பின், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அந்த போலி டாக்டர் மீது, பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது கடவூரை சேர்ந்த முதியவர், போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று, தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்ததால் இறந்துள்ளார். இதுவரை, போலி டாக்டரால் இரண்டு பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொ) பாக்கியலட்சுமி கூறுகையில்,” இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.