சீனாவில் உருவான கொரோனா வைரசால் மனித இனத்திற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ‘உயரினங்கள் மட்டுமின்றி, உயிரற்ற பொருட்கள் வழியாகவும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், சீனாவில் தயாராகி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை வாங்க உலக நாடுகள் அஞ்சுகின்றன.
ஒரு சில நாடுகள், ‘சீனாவில் பொருட்களை பதிவு செய்துவிட்டு, அதிக நாட்கள் காத்திருப்பதற்குப் பதிலாக, வேறு நாடுகளிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்’ என, முடிவெடுத்துள்ளன.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில், உலக அளவிலான, ‘செராமிக்’ கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் செராமிக் வியாபாரத்தில் சர்வதேச அளவில் கலக்கும், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்த முறை கொரோனா பாதிப்பால், பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை.
இதனால், இந்த முறை, இந்திய நிறுவனங்களுக்கு ‘ஜாக் பாட்’ அடித்துள்ளது. குறிப்பாக, பொறியியல் சார்ந்த பொருட்கள், ஆயத்த ஆடைகள், பருத்தி, பட்டு, பேஷன் பொருட்கள், செராமிக், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை வாங்க, உலக வியாபாரிகள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.
இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ள சீனாவுக்கு, உயிரிழப்புகள் மட்டுமின்றிப் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.