
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று, வெல்ல முடியாத அணியாக உலகை வலம் வந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இன்று ஒரு சோகமான நாள். முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலைக்கு இன்று அந்த அணி தள்ளப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இவற்றுக்கு இடையில் இரு குழுவாகப் பிரித்து, இரு குழுக்களில் இருந்தும் தலா இரண்டு அணிகள், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வாகும்.
இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 மட்டுமே ரன் எடுத்தது.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது. பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
இதனால், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தோற்று, கடைசி இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.
முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.