ஒருபுறம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டு, உலகத்துக்கு உத்தம வேடம் போட்டுக் கொண்டிருக்கும் சீனா, மறுபுறம், தனது வழக்கமான ஆக்கிரமிப்பு வேலையையும் காட்டிக் கொண்டிருக்கிறது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள பூடான் பள்ளத்தாக்கில் அத்துமீறி கட்டிடம் கட்டி வருகிறது சீனா. இது குறித்த சாட்டிலைட் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பூடானின் ஜகுர்லாங் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி நுழைந்து கட்டிடங்கள் கட்டுகிறது. இது, மேற்குவங்கத்தின் சிலுகுரி பாதையை ஆக்கிரமிக்கும் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பூடான் நாட்டின் கிழக்கு எல்லையில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் அமைந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பூடானுக்கு சொந்தமான ஜாகர்லாங் என்ற பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது.
இந்தப் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இப்பகுதியை தங்களது மேய்ச்சல் பகுதி என்று கூறுகிறது சீனா. இந்த நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளின் பேராசிரியர் ராபர்ட் பார்னெட் அளித்த பேட்டியில், ‘ஜாகர்லாங் பகுதியை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது’ என்று கூறினார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜாகர்லாங் பகுதியில் 192க்கும் மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களை சீனா கட்டமைத்து வருகிறது. அமெரிக்காவின் மேக்சர் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கட்டுமானப் பணிகள் நடப்பதை உறுதி செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இப்பகுதியில் சீன அரசு கட்டிடங்களைக் கட்டி வருவதாகத் தெரிகிறது. பூடான் – சீனா இடையிலான எல்லைப் பேச்சுவார்த்தை ஒருபுறம் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, மறுபுறம் சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு இருப்பதாக பூடான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பூடானுக்குச் சொந்தமான பகுதியில் சீனா கட்டுமானங்களை நிறுவுவதற்கு முக்கியக் காரணம், மேற்குவங்க மாநிலம் சிலுகுரி வழியாகச் செல்லும் இந்தியாவின் பாதையைக் கைப்பற்றுவதற்காக இருக்கலாம் என்கின்றனர்.
பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்களை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் பாதையாக சிலுகுரி பாதை அமைந்துள்ளது. எனவே சீனாவின் பூடான் ஆக்கிரமிப்பானது, சிலுகுரி பாதையை ஆக்கிரமிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.