லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய்க்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்குள் நடந்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்யின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான சென்னை தி.நகர் அலுவலகம் உட்பட 20 இடங்களில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், விஜயை விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தளத்திற்கு நேரடியாக சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கியுள்ளனர். மேலும், நடிகர் விஜயுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
பிகில் படத்தில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து முறையான ஆவணங்கள் இல்லாததால் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.