
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வந்து செல்ல பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும் தேர்வின் போது உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ்அதிவேகமாக பரவி வரும் இந்த சூழலில் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
.இந்த சூழலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு அமைச்சர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அந்த சந்திப்பில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் முக்கியமாக பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


