மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தத்து எடுத்து வளர்த்த 3 சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தில் (நீரி) விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மக்சூத் அன்சாரி (72).
இவர் 3 பெண் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார். இவர்களில் 16 வயது மூத்தப் பெண் அன்சாரிக்கு எதிராக தன்டோலி காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், தான் 1-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து அன்சாரி தன்னிடம் தவறாக நடந்துவந்ததாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக சமாதானம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
11 வயது மற்றும் ஆறரை வயது கொண்ட மற்ற இரு சிறுமிகளும் அன்சாரி மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என அச்சுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இப்புகார் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அன்சாரி மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பதிவு செய்த போலீஸார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “அன்சாரி ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது 2 மனைவிகளும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பெண் குழந்தைகளை வளர்த்து படிக்க வைப்பதாகக் கூறி தத்து எடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரது வீட்டை சோதனையிட்டதில் இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை” என்றனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகளின் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுமிகள் மூவரும் தற்போது அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



