திருப்பதி திருமலையில் செல்வதற்கு, 2003ம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்கள் மூலமாகவே பெரும்பாலும் வருகின்றனர்.
திருப்பதி திருமலைக்குச் செல்வதற்கு ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழக பஸ்கள் அதிகம் உள்ளன. இருப்பினும், மலைக்கு வரும் பக்தர்கள் சொந்த வாகனங்களில் அதிகம் வருவதாகக் கூறப் படுகிறது.
இவ்வாறு மலைபாதையில் வரும் பழைய வாகனங்களிலிருந்து, புகை அதிகமாக வெளியேறுவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறுகிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
எனவே இரு தினங்களுக்கு முன்னர், 2003ம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்கள் திருமலைக்கு வருவதற்கு தடை விதித்து, தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்ததுடன், அவ்வாறு வந்த வாகனங்களை திருப்பியும் அனுப்பியது.
தி.தி.தேவஸ்தானம் மேற்கொண்ட இந்த திடீர் நடவடிக்கையால் அவ்வாறு பழைய வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அன்பர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களை அனுமதித்ததுடன், இனி அக்டோபர் மாதம் முதல் 2003ம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திருமலைக்கு வருவதற்கு தடை விதிப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.