மலையாள சினிமாவில் வாய்ப்புகளுக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக விசாரணை ஆணையம் கேரள அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை காரில் கடத்தி செல்லப்பட்ட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இதற்கு திட்டம் தீட்டியது முன்னணி நடிகரான திலீப் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து காவல்துறை திலீப்பையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மலையாள சினிமா பெண் கலைஞர்களுக்காக தனி அமைப்பு தொடங்கப்பட்டது.
இதில்,நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி, பாவனா உட்பட பல முன்னணி நடிகைகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இதை தொடர்ந்து இந்த அமைப்பினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து,
மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் நடிகை சாரதா உட்பட 3 பேர் கொண்ட ஆணையத்தைஅமைத்து விசாரணை மேற்கொள்ள கேரள அரசு உத்தரவிட்டது.
இந்த விசாரணை கமிஷன் மலையாள சினிமாவில், நடிகர், நடிகைகள், பெண் கலைஞர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,நேற்று நீதிபதி ஹேமா, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விசாரணை அறிக்கையை வழங்கினார்.
அதில், மலையாள சினிமாத்துறையில் நடிகைகள் உட்பட பெண் கலைஞர்கள் பல்வேறு கொடுமைகளை சந்தித்து வருவதாகவும்,தங்களுக்கு உடன்படாத நடிகைகளுக்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக சில லாபிகள் செயல்பட்டு வருவதாகவும்,படத்தில் யார் நடிக்க வேண்டும்; யார் நடிக்கக்கூடாது என்பதையும் அவர்கள் தான் தீர்மானிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.