புது தில்லி:
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவர் தனது நினைவாக மரங்களை நடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 60 வயதான அவர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மோடி அமைச்சரவையில் சென்ற வருடம் தான் சேர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பு வகித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, உடனடியாக சட்டம் நிறைவேற அனில் மாதவ் தவே உறுதுணையாகவும் ஆர்வமாகவும் செயல்பட்டார்.
இந்நிலையில் தவே, 2012-ஆம் ஆண்டு எழுதப்பட்ட உயில் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது. தன் உடல் நர்மதா ஆற்றங்கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ‘என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம்; அதற்கு பதில், ஒரு மரம் நடுங்கள் போதும்.’ என்று உயிலில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவரம் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் கனத்த மனத்துடன் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தவே, ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.