மொபைல் கட்டணங்கள் 10 மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்போதே அலறுகிறார்கள் பலரும்!
‘மொபைல் போன்’ வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதை அடுத்து, தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கட்டண நிர்ணயம் வந்துவிடும் அபாயம் இருப்பதாக பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் பலத்த போட்டியின் காரணமாக ‘கட்டண விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும்’ என்று தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்த நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் ‘தொலைபேசி அழைப்புகள் மற்றும் ‘மொபைல் டேட்டா’க்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று தெரிவித்தார். இதை அடுத்து தொலைபேசி கட்டணங்கள் தற்போதைய கட்டணத்தை விட 5 முதல் 10 மடங்கு வரை உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே நேரம், தொலைத்தொடர்பு என்பது உற்பத்தித் துறை அல்ல, சேவைத் துறை என்றும், ஒருமுறை முதலீடு செய்து பின்னர் சேவைகளுக்கான செலவு மட்டுமே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதால், இதனை அரசு கணக்கில் கொண்டு, கட்டண உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஒருசாரார் கூறுகின்றனர். மேலும், தற்போது போட்டியாளராக இருந்த நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், போட்டியற்ற சூழலை ஏற்படுத்தி ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கும் என்றும் கருத்துகள் எழுந்து வருகின்றன.