
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பதராயணபுரத்தில் கொரோனா வைரஸ் நோயாளியுடன் தொடர்புடையவர்களை சோதனைக்காக தனிமைப்பிரிவுக்கு இட்டுச் செல்ல முயன்ற போது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பதராயணபுரம் நொவெல் கொரோனா பரவலைத் தடுக்க சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படும் சில நபர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முயற்சித்தனர்.
இந்தப் பகுதியில் பல பாசிட்டிவ் கேஸ்கள் ரிப்போர்ட் ஆனதையடுத்து இவர்களுடன் முதல்நிலை தொடர்புடையவர்கள் குவாரண்டைன் மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
‘அடுத்த கட்டமாக 2ம் கட்ட தொடர்புடைய 58 பேரை அதிகாரிகள் அடையாளப்படுத்தினர். இதில் முதல் 15 பேர் அதிகாரிகளினால் பேருந்தில் அனுப்பப்பட்டனர், அடுத்தக் குழுவை அழைத்த போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இங்கேயே டெஸ்ட் எடுங்கள் குவாரண்டைன் மையத்துக்கு வரமாட்டோம்’ என்றனர் என்று டிசிபி தெரிவித்தார்.
இதற்கிடையே அப்பகுதியில் நிறைய பேர் கூடி கோஷமிட ஆரம்பித்தார், ‘நீதி வேண்டும்’ என்று அவர்கள் கோஷமிட்டனர். மேலும் சாலை தடுப்புகளை அகற்றி தூக்கி எறிய முற்பட்டனர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிபி தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றார்.


