
மகாராஷ்டிராவில் மும்பையின் அந்தேரி கிழக்கில் ஆசாத் நகரில் வசித்து வருபவர் பிரேம் மூர்த்தி பாண்டே. இவர் மும்பை விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். முதல்கட்ட லாக்டவுன் சமயத்தில் அவர் மும்பையில் இருந்தார்.
லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என தெரிந்தவுடன் உத்தரபிரதேசம் பிரயாக்ராஜின் (அலகாபாத்) புறநகரில் உள்ள தனது குடும்பத்தினர் கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார். பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் எப்படி கிராமத்துக்கு செல்வது என்று தெரியாமல் திணறி வந்தார்.
இந்நிலையில், சரக்கு வாகனம் மூலம் அந்த கிராமத்திற்கு செல்ல முடிவு எடுத்தார். அதாவது, அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தடை இல்லை என அரசு கூறியுள்ளதால் அதனை பின்பற்ற திட்டம்போட்டார்.
முதலில் நாசிக் அருகே உள்ள பிம்பால்கான் செல்வதற்காக மினி லாரி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். லாரியில் அங்கு சென்று ரூ.10 ஆயிரத்துக்கு வாட்டர்மேலன் வாங்கினார். பின் அங்கியிருந்து மும்பைக்கு திரும்பி ஏற்கனவே பேசி வைத்திருந்த ஒரு வர்த்தகரிடம் அதனை விற்பனை செய்தார்.

பின் பிம்பால்கான் சந்தையில் கிலோ ரூ.9.10 என்ற விலைக்கு 25,520 கிலோ வெங்காயத்தை வாங்கினார். பின் அங்கியிருந்து வெங்காயத்துடன் 1,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரய்கராஜ் செல்ல ரூ.77,500 வாடகையில் லாரி ஒன்றை அமர்த்தினார். கடந்த 20ஆம் தேதி வெங்காயத்துடன் லாரியில் கிளம்பிய பிரேம் 23ஆம் தேதி பிரயக்ராஜ் சென்றடைந்தார்.
அந்நகரின் புறநகரில் உள்ள முண்டேரா மொத்த சந்தைக்கு சென்று வெங்காயத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தார் ஆனால் பணத்தை கொடுத்தும் வாங்கும் நபர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து அருகில் உள்ள தனது கிராமமான கோட்வா முபர்க்பூருக்கு லாரியில் கொண்டு சென்று அங்கு வெங்காயத்தை இறக்கி வைத்தார். பின் கடந்தவெள்ளிக்கிழமையன்று அந்த பகுதியில் உள்ள காவல் நிலையம் சென்றார். அதன்பிறகு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு வீட்டில் தனிமைப்படுத்திகொள்ளும்படி அறிவுறுத்தியது.
சொந்த ஊருக்கு செல்வதற்காக பிரேம் மூர்த்தி பாண்டே மேற்கொண்ட இந்த முயற்சி மகாராஷ்டிரா, உ.பி.யில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


