பீஜப்புர்:
கர்நாடகா மாநிலம் பீஜப்புர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு தலித் இளைஞனை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி, கர்ப்பமான சூழலில் வீட்டுக்கு வந்த முஸ்லீம் இளம் பெண்ணை, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம், பீஜப்புர் மாவட்டத்தில் முடேபிஹால் தாலுகாவில் உள்ள குண்டக்கனல கிராமத்தில் வசித்து வந்தவர் சயபன்னா ஷரனப்பா கொன்னுர் (24). இவருக்கும் அந்த கிராமத்தில் வசித்த பானு பேகம்(21) என்ற முஸ்லிம் பெண்ணும் காதல் முளைத்தது
இருவரின் காதல் குறித்து அறிந்த பானுவின் பெற்றோர், இதனை கடுமையாக எதிர்த்தனர். ஜனவரி 22ம் தேதி பானுவின் குடுமத்தினர், சயபன்னாவை கண்மூடித்தனமாகத் தாக்கி மிரட்டியுள்ளனர். மேலும், தங்களது மகள் வயது குறைவானவள் என்றும், சயபன்னா தங்களது மகளை மயக்கி ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காவல்துறையில் புகார் செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி சயபன்னா-பானு ஜோடி ஊரைவிட்டு வெளியேறி கோவாவுக்குச் சென்றனர். அங்கே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். பின், கடந்த சனிக்கிழமை தமது கிராமத்துக்குத் திரும்பிய அவர்கள், பானுவின் பெற்றோரிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டுவந்திருப்பதாகக் கூறினர். அந்த மகிழ்ச்சியான செய்தி, பானு கர்ப்பமாக இருப்பதுதான் என்று தெரிவித்தனர். ஆனால் பானுவின் பெற்றோர் இதை வரவேற்கவில்லை. மாறாக, பானுவின் தந்தை இந்த உறவை முடித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
அவர்கள் மறுக்கவே, பானுவையும், சயபன்னாவையும் பானுவின் பெற்றோர் கண்மூடித்தனாகத் தாக்கியுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்து தப்பிய சயபன்னா, காவல் நிலையத்தில் சென்று உதவி கோரியுள்ளார். அவரது புகாரின் பேரில் அதிகாரிகள் பானுவின் வீட்டுக்குச் சென்றபோது, பானு அவரது வீட்டாரால் பல முறை கத்திக் குத்துக்கு ஆளாகி, தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டிருந்ததைக் கண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தலிகோட் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிகே படீல், ”பானுவை அவரது பெற்றோர் தீ வைத்து உயிருடன் எரித்துக் கொன்றுவிட்டனர். இது தொடர்பாக, பானுவின் அம்மா, சகோதரன், சகோதரி மற்றும் சயபன்னாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார். அவர்கள் மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பானுவின் மூத்த சகோதரிகள் இருவர், இரு சகோதரர்கள் தலைமறைவாகியுள்ளனர்.